விஸ்வநாதன் ஆனந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை:
மீனம்பாக்கம் :மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அஜய் மாக்கன் நேற்றிரவு டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர், அளித்த பேட்டி: டென்னிஸ் விளையாட்டில் வீரர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிருஷ்டவசமானது. வீரர்கள், விளையாட்டின்போது, சொந்த விருப்பு, வெறுப்பு காட்டாமல் நாட்டு நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும். வீரர்களை போட்டிக்கு தேர்ந்தெடுப்பது அமைச்சகம் அல்ல. இந்திய டென்னிஸ் சங்கம்தான். எனவே அமைச்சகத்தின் சார்பில் இந்த பிரச்னைக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் என் சார்பில் ஒரு யோசனையை தெரிவித்துள்ளேன். இந்திய டென்னிஸ் சங்கம், போட்டிக்கு ஒரே அணியை அனுப்புவதைவிட இரண்டு அணிகளை அனுப்பினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். இந்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வழக்கமாக 50 வீரர்கள்தான் செல்வார்கள். ஆனால் இந்த முறை 76 பேர் செல்கிறார்கள். எனவே ஒலிம்பிக் போட்டி பயிற்சி மற்றும் செலவுக்காக மத்திய அரசு ரூ.260 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும், 100 பயிற்சியாளர்களையும் அனுப்புகிறது. எனவே இம்முறை அதிக தங்கப்பதக்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களை வாங்குவோம். உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றால், முறைப்படி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவருடைய பெயரை பரிந்துரைக்க வேண்டும். ஆணையம் அவர் பெயரை பரிந்துரைத்தால் அதை நான் நிச்சயமாக பிரதமருக்கு அனுப்பி வைப்பேன். பிரதமர், இறுதி முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக