4 ஏப்., 2012

முத்தரையர்கள் பற்றிய முதல் செப்பேடு கண்டெடுப்பு

முத்தரையர்கள் பற்றிய முதல் செப்பேடு கண்டெடுப்பு

ஈரோடு: கோவை மாவட்டம் கணியூரில் கிடைத்த செப்பேடு முத்தரையர்கள் பற்றிய அரிய தகவல்களை கொண்டுள்ளது. கோவை மாவட்டம் கணியூரில் உள்ள பழனி முத்தரையர் மடத்தில் உள்ள செப்பேடு இதுவரை படித்து ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. முத்தரையர் தோற்றம், சமூக பெருக்கம், சோழர், பாண்டியர் தொடர்பு, தமிழகம் முழுவதும் அவர்கள் பரவியது,
அனைவரும் ஒன்று கூடி பழனியில் ஒரு மடம் ஏற்படுத்தி, அதற்கு கொடையளித்த விபரம் ஆகியவை அந்த செப்பேட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு மையத்தலைவர் புலவர் ராசு ஆய்வு செய்தார். செப்பேட்டில் கூறியிருப்பதாவது:
தேவேந்திரன் முதலான தேர்வர்களும், தெய்வ ரிஷிகளும், முனிவர்களும், கின்னரர், கிம்புருடர், அஷ்ட பைரவர், சித்தி வித்யாதரர், ஆயிரத்தொரு சக்திகள், கருட கந்தருவர், அட்ட திக்குப் பாலகர்கள் ஆகியோர் கூடி சிவபெருமானுக்கு தேரோட்டினர். அப்போது பேரண்டப்பறவை ஒன்று தேரை தடுத்து நிறுத்திவிட்டது.
சிவபெருமான் வலது தோளில் ஒரு வியர்வை முத்து தோன்றியது. அந்த முத்தை பார்வதி பூமியில் விட, அது இரண்டு கூறாகப்பிரிந்து, அதில் இரண்டு வன்னிமுத்தரசர் தோன்றினர். அவர்கள் தேரை நிறுத்திய கண்டப்பேரண்டப் பறவையை கொன்றனர். பெரிய வன்னி முத்தரசன் தெய்வலோகக்
காவலுக்கும், சின்ன முத்தரசன் ஸ்ரீரங்கம் காவலுக்கும் நியமிக்கப்பட்டனர்.
கோப்புலிங்க ராஜாவின் மகளை திருமணம் செய்து கொண்ட சின்னமுத்தரசனுக்கு நல்ல நாச்சி என்ற மகளும், சென்னிய வளநாடன், சேமன், அகளங்கன், ராசாக்கள், நயினார் என்ற மகன்களும் பிறந்தனர். சகோதரி நல்ல நாச்சியைப் பாண்டியனுக்கு மணம் முடித்தனர்.
சோழரிடம் பணியாற்றிய இவர்கள் வீரத்தை மதித்த பாண்டியர், ஆட்சிப் பொறுப்பு கொடுத்தனர். வன்னி முத்தரசர்கள் பல்கிப் பெருகி தமிழகம் எங்கும் பரவி வாழ்ந்தனர். சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு நாட்டை சேர்ந்த 300 ஊர்களை சேர்ந்த வன்னிமுத்தரசர்கள் அனைவரும் கி.பி., 1674ம் ஆண்டு தைப்பூசம் அன்று பழனியில் கூடினர்.
திருஆவினன்குடிக்கும் கீழ்புறம், சரவணப்பொய்கையின் தென்மேல்புறம் முத்தரையர் மடம் ஒன்றை நிறுவி, குழந்தைவேலு உடையான் என்பவரை மடத்து நிர்வாகியாக நியமித்தனர். பெரிய ஊருக்கு பத்து பணமும், சின்ன ஊருக்கு ஐந்து பணமும், பண்ணையத்துக்கு இரண்டு பணமும், ஆள்காரர் ஒரு பணமும், திருமணத்தில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் இரண்டிரண்டு பணமும், தேருக்கு ஒரு பணம் என மடத்துக்கு
கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தில், மூன்றில் ஒரு பங்கு மடத்துக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
மடத்துக்கு வருவோருக்கு உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
புலவர் ராசு கூறுகையில்,செப்பேட்டை ராமசாமி கவிராயர் என்பவர் எழுதிய விபரமும், முத்தரையர்கள் வாழ்ந்த ஊர்கள், முக்கியமான தலைவர்கள் பற்றிய விபரமும் அதில் கூறப்பட்டுள்ளது. முத்தரையர் சிறப்புகளை பற்றி கூறும், இந்த செப்பேடு முத்தரையர் சமூகம் பற்றிய முதல் செப்பேடு,” என்றார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது