2 மார்., 2013

அ.தி.மு.க.வுக்குள் ‘டைம் பாம்’! பதவி இழந்த அமைச்சர்கள் தரும் அதிர வைக்கும் தகவல்கள்!!




தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று மூன்று அமைச்சர்களை நீக்கியது தொடர்பாக கட்சிக்குள் சில அதிருப்திக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க. அரசில் அமைச்சர்கள் தூக்கியெறியப்படுவது குறித்து முன்பு மூச்சே எழுவதில்லை. இப்போது ஆச்சரியமாக, சில குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன.
இந்த ஆட்சியில் பதவி இழந்த சில முன்னாள் அமைச்சர்களின் குரல், இந்தக் கடிதத்தில் உள்ளது.
கடிதத்தை வெளியிடுவதற்குமுன், நாமும் சில உறுதிபடுத்தல்களை செய்தோம். சில அ.தி.மு.க. முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டு பேசினோம். இந்த கடிதம் எழுதியதில் தொடர்புடைய ஒரு முன்னாள் அமைச்சருடனும் உரையாடினோம்.
இதில் யாரும், தமது பெயர்கள் வெளியாவதை விரும்பவில்லை. அதை புரிந்துகொள்ள முடிகிறது. கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விஷயங்கள் உண்மை என்பது எமக்கும் ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், கடிதத்தை வெளியிடுகிறோம். படித்துப் பாருங்கள்.
எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு,
இன்று நடந்த அமைச்சரவையில் அமைச்சர்கள் சிவபதி, கோகுல இந்திரா, விஜய் மூவரையும் பதவி நீக்கம் குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை. எங்கள் கேள்வியெல்லாம் உங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டிய உளவுத்துறை சரியாக வேலை செய்கிறதா என்பதே? முதல்வர் அலுவலக அதிகாரிகள் சரியாக வேலை செய்கிறார்களா இல்லையா என்பதே?
டி.ஜி.பி ராமனுஜம் பணத்துக்கு மசியமாட்டார். அதே போல், ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சனும் நேர்மையானவர்.
ஆனால், அதற்கு அடுத்த மட்டத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் அளவில் லஞ்சம் புரையோடி கொண்டுள்ளது. ஒரு சில எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறோம்.

கே.வி. ராமலிங்கம் 10 கோடி கதையை அமுக்கினார்!

அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வீட்டு திருமணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. தினமலரில் டீக்கடை பெஞ்சில் வெளிப்படையாக செய்தி வந்தது. தினமணி மெய்யாலுமா பகுதியில் அவர் வீட்டு கல்யாணம் குறித்து செய்தி வந்தது. பல இணைய தளங்கள் இந்த கல்யாணத்தை விமர்சனம் செய்தன.
10 கோடி வரை செலவு செய்து பொதுப்பணி துறை காண்டிராக்டர் தலையில் கட்டி விட்டார் என்று பலத்த சர்ச்சை எழுந்தது.
இருந்தாலும், அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
மேயர் சைதை துரைசாமி வழியாக சென்று முதல்வர் அலுவலகத்திலும், உளவுத்துறையிலும் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து பேசி அமுக்கி விட்டார்.
இவருக்கு மட்டும் ஏன் பதவி நீக்கம் இல்லை? ஒரு கண்ணுக்கு வெண்ணை, மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்றால், எந்த தொண்டன் ஒத்து கொள்வான்?

நத்தம் விஸ்வநாதன் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எஞ்சினியர்களிடம் செய்யும் வசூல் மிக பிரபலம்.
ஒரு எஞ்சினியர் அப்பயிண்ட்மெண்ட் என்றால் குறைந்தது 10 லட்சம் வாங்குகிறார். தூத்துக்குடி மின் நிலையம், மேட்டூர் மின் நிலையம் என்று மாறி புகார் கொடுத்தாலும், இவர் வசூல் வாங்குவதை குறைப்பதில்லை. இருந்தாலும் இவர் மீது நடவடிக்கை இல்லை.
தேவர் ஜாதி உளவுத்துறை அதிகாரிகள் இவர் மீது புகார் வராமல் அமுக்கி விட்டனர்.
பொன் மாணிக்க வேல், தாமரை கண்ணன், ராஜேந்திரன் போன்ற உயர் அதிகாரிகளை உளவுத்துறையில் இருந்து நீக்கினாலும், உளவுத்துறையில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் அளவில் தேவர் ஜாதி கை ஓங்கி உள்ளது. தேவர் ஜாதி மந்திரிகள் மீது உங்களால் கை வைக்க முடியுமா?  

பன்னீர்செல்வம் – தி.மு.க. டீல்’ அறிந்திருக்கிறீர்களா?

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதி துறையில் உள்ள தணிக்கை துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறது. நிதி அமைச்சர் ஓ.பி.எஸ் பி.ஏக்கள் நில அபகரிப்பு வழக்கை நீர்த்து விட செய்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வசம் சுமார் 20 கோடி வசூல் செய்துள்ளனர். தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது இருக்கும் நில அபகரிப்பு வழக்குகள் கிடப்பில் போட யார் காரணம்?
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே? தான் அடுத்த முதல்வர் என்று சொல்லியே தப்பித்து கொள்கிறார்.
அதிகாரிகளும் அவர் பி.ஏக்கள் செய்யும் தவறை கண்டு கொள்வதில்லை. வருங்கால முதல்வரிடம் பொல்லாப்பு எதற்கு என்று ஒதுங்கி விடுகின்றனர்.
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு கேரளாவில் ஏகப்பட்ட எஸ்டேட் நிலங்கள் உள்ளன. இது எப்படி வெளிவராமல் உள்ளது?
இவர் தி.மு.க.விடம் ரகசிய உறவு வைத்து கொண்டு, இவர் மீது வரும் புகார்களை வெளி வராமல் செய்து விடுகிறார் என்று நம் தொண்டர்கள் மத்தியில் பேச்சு உள்ளது. ஒரு அ.தி.மு.க. தொண்டன், தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ளலாமா?

மேயர் சைதை, வைத்தியலிங்கம் ஆளுக்கு 5 கோடி!

அமைச்சர் வைத்தியலிங்கம் துறையில் ஊழல் நடக்கிறது. அமைச்சர் வைத்தியிலிங்கம் துறையில் உள்ள அருண் ஐ.ஏ.எஸ் (டி.டி.சி.பி இயக்குனர்) ஒரு அப்ருவல் வாங்க 10 கோடி லஞ்சம் வாங்கி உள்ளார்.
கட்சி நிதி என்று செல்லி, மேயர் சைதை, அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும், சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஷெரடன் ஓட்டலில் வைத்து ஆளுக்கு 5 கோடிகள் வாங்கி உள்ளனர். இது கட்சி கணக்குக்கு வரவே இல்லை.

பழனியப்பன் வாங்கியது எவ்வளவு? காட்டியது எவ்வளவு?

அமைச்சர் பழனியப்பன் விவசாய கல்லுரி ஒன்று அனுமதி கொடுக்க 1 கோடி வாங்கி விட்டு, கட்சியில் மற்றும் உங்களிடம் சொன்ன கணக்கு 50 லட்சம் மட்டுமே.
சில மாதங்கள் முன், மதுரை அருகே மானேஜ்மென்ட் கல்லுரி தொடங்க அமைச்சர் பழனியப்பன் பணம் வாங்கி கொண்டு, வாங்கிய தொகையை குறைத்துதான் சொன்னார்.
இப்படி யோக்கியர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பெரும் சுருட்டுகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் தண்டனை?
உளவுத்துறை அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு, முதல்வர் அலுவலக அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு என்ன தவறு செய்தாலும் ஊழல் இல்லையா?

அருண் 10 கோடி வாங்கியபோது காப்பாற்றியது யார்?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தங்கள் சக அதிகாரிகளை காப்பாற்றி விடுகின்றனர். அருண் ஐ.ஏ.எஸ்., 10 கோடி லஞ்சம் வாங்கியும் உங்கள் கவனத்துக்கு வராமல் மறைத்த உளவுத்துறை அதிகாரிகள் யார்? முதல்வர் அலுவலக அதிகாரிகள் யார்?
இவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

செந்தில் பாலாஜி உளவுத்துறை நடத்துகிறாரா?

அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் முன்னாள் கலெக்டர் ஷோபனா ஐ.ஏ.எஸ் வழியாக உங்கள் அலுவலகத்தையே உளவு பார்த்தவர்.
ஷோபனா ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றினாலும், உளவுத்துறையை சரிக்கட்டி, தன் மீது எந்த புகாரும் வராமல் பார்த்து கொள்வதில் வல்லவர் செந்தில் பாலாஜி. அத்துடன் இவர், கரூர் முன்னால் தி.மு.க. எம்.பியுடன் தொழில் முறையில் இன்னும் அண்டர்ஸ்டண்டிங் வைத்துள்ளவர்.
கரூர் அ.தி.மு.க. தொண்டன் பலமுறை புகார் கடிதம் போட்டாலும், கார்டனில் உள்ள உங்கள் பி.ஏ. பூங்குன்றன், கட்சி ஆபீசில் உள்ள மகாலிங்கம் தாண்டி உங்களை அடையாமல் வழி செய்து விடுவார்.
வருகிற தேர்தலில் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி நின்றால் எளிதாக ஜெயித்து விடுவார் என்ற அளவுக்கு கட்சியை கீழே கொண்டு வந்து விட்டார். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? ..

பாலியல் குற்றச்சாட்டுக்கு பதவி உயர்வா?

அமைச்சர் விஜய் ஆபீசில் ஒரு பெண்ணை மானபங்க படுத்தியதற்கு நடவடிக்கை எடுத்த தாங்கள், திட்ட குழுவில் வேலை பார்த்த கிறிஸ்டோபர் நெல்சன் ஐ.பி.எஸ் (ஓய்வு) மீது பாலியல் குற்றசாட்டு வந்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?
மாறாக அவருக்கு தகவல் அறியும் கமிஷனர் பதவி உயர்வு கொடுத்து இருக்கிறீர்கள்?
திட்டக்குழு துணை தலைவர் சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) குறித்து ராஜினாமா செய்த திட்டக்குழு உறுப்பினர் பால குருசாமி கடுமையான குற்றசாட்டுகளை வீசினாலும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள ஷீலா பிரியா ஐ.ஏ.எஸ் மறைத்து விட்டாரே? இதற்கு என்ன நடவடிக்கை?
எங்களைப்போன்று பாவப்பட்ட தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று தானே இந்த ஆட்சி அமைத்துள்ளோம். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓட்டு போட்டா ஆட்சி அமைத்துள்ளோம்?

முதல்வர் பதவியில் யாருக்குதான் ஆசை இல்லை?

அண்ணன் ஜெயக்குமாரை சபாநாயகர் பதவியில் இருந்து எடுத்த நீங்கள், முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட மற்ற மந்திரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நத்தம் விஸ்வநாதனிடம், “அடுத்த முதல்வர் நீங்கள்தான்” என்றால் வேலை நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நெடுஞ்சாலை துறை அமைச்சர், கேரளா ஜோசியரை கொண்டு வந்து தமக்கு முதல்வர் பதவிக்கு யோகம் உள்ளதா என்று கேட்டது உங்களுக்கு தெரியுமா?
அக்கா ப.வளர்மதிக்கு முதல்வராகும் ஆசை இல்லையா?
அண்ணன் கே.பி முனுசாமிக்கு முதல்வர் ஆசை வந்து, அவர் அண்ணன் செங்கோட்டையன் பற்றி உங்களிடம் போட்டு கொடுக்கவில்லையா?
யாருக்குதான் முதல்வராகும் ஆசை இல்லை? ஏன் அண்ணன் ஜெயக்குமாருக்கு மட்டும் தண்டனை?

எங்களை போன்று ஏமாந்த மந்திரிகளுக்கு மட்டும்தானா?

தண்டனை என்பது எங்களை போன்று ஏமாந்த மந்திரிகளுக்கு மட்டும்தானா? எங்கள் தவறு, முதல்வர் அலுவலக அதிகாரிகளை, உளவுத்துறையை சரிக்கட்ட தெரியாத குற்றம்தானா?
தவறு செய்தால் எந்த தண்டனைக்கும் தயார். அது எங்களில் ஒரு சிலருக்கு மட்டும் என்றால் என்ன நியாயம்? தயவு செய்து கட்சியில் உள்ள அனைவரையும் பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி நடத்த வேண்டுகிறோம்.
இவண்
பாதிகப்பட்ட மாஜி அ.தி.மு.க. மந்திரிகள்
(2011 மே மாதம் முதல் —)






கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........