13 ஜூலை, 2013

3 நாடுகள் கிரிக்கெட்: டோனியின் அதிரடியில் இந்திய அணி ‘சாம்பியன்’ பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது


போர்ட் ஆப் ஸ்பெயின்,
முத்தரப்பு கிரிக்கெட்டின் பரபரப்பான இறுதிஆட்டத்தில் டோனியின் அதிரடி சிக்சர்களால் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கை 201 ரன்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது.
தசைப்பிடிப்பு பிரச்சினை சரியானதால் அணிக்கு திரும்பிய இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 48.5 ஓவர்களில் 201 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக சங்கக்கரா 71 ரன்னும், திரிமன்னே 46 ரன்னும் எடுத்தனர். தனது 400–வது போட்டியில் ஆடிய ஜெயவர்த்தனே 22 ரன்னே எடுத்தார். இந்திய தரப்பில் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
விராட்கோலி 2 ரன்
பின்னர் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
எதிர்பாக்கப்பட்ட ஷிகர் தவான் (16 ரன்), அடுத்து வந்த விராட் கோலி (2 ரன்) ஆகியோர் எரங்கா பந்து வீச்சிலும், தினேஷ் கார்த்திக் (23 ரன்) ஹெராத் பந்து வீச்சிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரோகித்ஷர்மா நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் விளையாடினார்.
ரோகித் அரைசதம்
இதைத்தொடர்ந்து சுரேஷ்ரெய்னா, ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ரோகித் ஷர்மா (89 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்) ஹெராத் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார். அடித்து ஆடிய சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்த நிலையில் லக்மல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பின்னர் கேப்டன் டோனியுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா (5 ரன்), அஸ்வின் (0) ஆகியோர் ஹெராத் பந்து வீச்சிலும், புவனேஸ்வர்குமார் (0), மலிங்கா பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. முறைகளில் ஆட்டம் இழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். அப்போது இந்திய அணி 41.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து தடுமாறியது.
பரபரப்பு
அடுத்து களம் கண்ட வினய்குமார், டோனிக்கு பக்கபலமாக நின்றார். திடீர் விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் டோனி மட்டும் பதற்றமின்றி பேட்டை சுழற்றி, ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 182 ரன்களை எட்டிய போது வினய்குமார் (16 பந்துகளில் 5 ரன்) மேத்யூஸ் பந்து வீச்சில் செனநாயக்கேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி விக்கெட்டுக்கு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, டோனியுடன் கைகோர்த்தார். தனது விக்கெட்டை இழந்தால் அணியின் கதை அம்பேல் ஆகி விடும் என்பதை உணர்ந்து இஷாந்த் ஷர்மா எச்சரிக்கையுடன் ஆடினார். என்றாலும் அவர் ஒரு ரன்–அவுட்டில் இருந்தும் தப்பினார்.
இந்திய அணி வெற்றி
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் எரங்கா வீசினார். அதனை எதிர்கொண்ட டோனி முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. 2–வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, 3–வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4–வது பந்தையும் டோனி சிக்சருக்கு தூக்கி அணிக்கு வெற்றிக்கனியை பறித்து தந்தார்.
49.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்து கோப்பையை கைப்பற்றியது. மினி உலககோப்பையை வசப்படுத்திய இந்திய அணி தொடர்ந்து 2–வது போட்டியில் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. கேப்டன் டோனி 52 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்னும், இஷாந்த் ஷர்மா 7 பந்துகளில் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் ஹெராத் 4 விக்கெட்டுகளும், எரங்கா 2 விக்கெட்டும், லக்மல், மேத்யூஸ், மலிங்கா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
தொடர்நாயகன்...
வெற்றிக்கு காரணமாக விளங்கிய டோனியை, சக வீரர்கள் கட்டித்தழுவி பாராட்டினார்கள். இந்திய கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருதும், புவனேஸ்வர் குமார் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த போட்டித் தொடரில் ரன் குவிப்பில் இலங்கை வீரர் தரங்கா (5 ஆட்டங்களில் 223 ரன்) முதலிடத்தையும், இந்திய வீரர் ரோகித் ஷர்மா (5 ஆட்டங்களில் 217 ரன்) 2–வது இடத்தையும் பிடித்தனர். பந்து வீச்சில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் (4 ஆட்டங்களில் 10 விக்கெட்), இலங்கை வீரர் ஹெராத் (4 ஆட்டங்களில் 10 விக்கெட்) முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
டோனியின் வெற்றி ரகசியம்
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘அதிக எடை கொண்ட பேட்டுடன் (2 கிலோ எடை) விளையாடினேன். அந்த பேட், முரட்டுத்தனமாக அதிரடி காட்ட மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த தொடரில் அணியின் 15 வீரர்களும் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் களத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இது அணிக்கு நல்ல அறிகுறியாகும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்ககூடிய நல்ல கிரிக்கெட் அறிவை எனக்கு கடவுள் அளித்து இருப்பதாக நினைக்கிறேன். கடைசி ஓவரில் என்னால் 15 ரன்களை எடுக்க முடியும் என்பது தெரியும். கடைசி ஓவரை வீசிய எரங்காவுக்கு, மலிங்கா அல்லது மேத்யூஸ் போன்று அனுபவம் கிடையாது. இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். நான் நினைத்தபடி எல்லாம் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்றார்.
மேத்யூஸ் புலம்பல்
தோல்விக்கு பின்னர் இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இது சிறப்பான ஆட்டம். 200 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். சங்கக்கரா, திரிமன்னே ஆகியோர் நல்ல பேட்டிங் செய்தனர். அவர்கள் ஆட்டம் இழந்த பின்னர் எங்கள் அணி உத்வேகத்தை இழந்து விட்டது. நாங்கள் கடைசி வரை நின்று இருந்தால் 230 முதல் 240 ரன் வரை எடுத்து இருக்க முடியும். அப்படி செய்து இருந்தால் அது சவாலான இலக்காக அமைந்து இருக்கும். ஹெராத் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ஆனால் அபாயகரமான பேட்ஸ்மேனான டோனி ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக்கி விட்டார்’ என்றார்.
இரண்டு கோப்பையுடன்...
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஜடேஜா, ரெய்னா, அஸ்வின் உள்ளிட்டோர் ‘டுவிட்டர்’ இணையதளம் மூலம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ‘‘கடந்த இரண்டு மாதங்கள் எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நாங்கள் இரண்டு கோப்பையுடன் தாயகம் திரும்புகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), இலங்கை (108 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி 3–வது இடத்திலும், கேப்டன் டோனி 6–வது இடத்திலும் இருக்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 2 இடம் சரிந்து 5–வது இடத்திலும், புவனேஸ்வர்குமார் 29 இடங்கள் முன்னேறி 20–வது இடத்திலும் இருக்கிறார்கள்.

வெற்றி கேப்டனை அழைக்க மறந்த வர்ணனையாளர்
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வாகை சூடியதை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான அருண் லால், ஆட்டநாயகன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளை அறிவித்த பிறகு, வெற்றிக்குரிய கேப்டனை கோப்பையை வாங்க வரும்படி அறிவிக்க மறந்து விட்டார். பின்னர் சில வினாடிகளில் சுதாரித்து கொண்ட அவர், ‘மன்னித்து விடுங்கள்’ என்று கூறிய படி, கேப்டன் டோனியை பரிசுக்கோப்பையை பெற வரும்படி அழைத்தார்.
ஆனால் இந்திய கேப்டன் டோனி தனக்கு பதிலாக விராட் கோலியை கோப்பையை பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். இந்த தொடரில் காயத்தால் டோனி விலகி இருந்த போது, கோலி 3 லீக் ஆட்டங்களில் கேப்டனாக பணியாற்றினார். அவர் தயக்கம் காட்டினாலும், டோனி அவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார். கோலி கோப்பையை பெற்ற பிறகு, அதை டோனி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........